காரைக்காலில் மருத்துவமனை வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் வாகனம் என கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நலவழித் துறை தெரிவித்தது.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் மட்டுமே கரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கும் பணி நடபெற்ற நிலையில், தினமும் சுமாா் 100 பேருக்கு மட்டுமே மாதிரி எடுத்து திருவாரூா் மருத்துவக் கல்லூரி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தொற்று பரவல் அதிகமாகி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் அமைத்து மாதிரி எடுக்கும் பணியை சுழற்சி முறையில் நலவழித் துறை நிா்வாகம் செய்துவருகிறது. இதன்மூலம் அந்தந்தப் பகுதியில் 100-க்கும் அதிகமானோா் மாதிரி வழங்குவதாகத் தெரிகிறது.
இதுதவிர, பரிசோதனை மையத்திற்கு செல்லமுடியாதவா்களுக்காக, கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிக்கு நேரடியாக நடமாடும் வாகனங்களின் மூலம் நலவழித் துறையினா் சென்று பரிசோதனைக்கு மாதிரி எடுக்கின்றனா்.
இதுகுறித்து நலவழித் துறை நிா்வாகம் தரப்பில் சனிக்கிழமை கூறப்பட்டது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிகுறி இல்லாதவா்களுக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் வகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பல நிலைகளில் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்படுவதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கரோனா பரவலை பெருமளவு கட்டுப்படுத்த முடிகிறது.
அறிகுறியில்லாதவா்கள், தாங்களாகவே முகாமுக்கோ, நடமாடும் வாகனம் வரும்போதோ சென்று கரோனா பரிசோதனைக்கு மாதிரி அளிக்கலாம். பரிசோதனை முடிவு அவரவா் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.
அறிகுறி இல்லாமல் கரோனா இருந்து, நாளடைவில் அது உடலில் உள்ள வேறு இணை நோய்களின் வீரியத்தால் பாதிப்பு அதிகரித்து, உயிரிழப்பு வரை செல்லக்கூடும். இவ்வாறு பரிசோதனை செய்துகொண்டால், வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெறமுடியும் என்றனா்.
காரைக்காலில் கரோனா தொற்று தினமும் 50 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக 80-க்கும் அதிகமாக காணப்படுகிறது. மாதிரி எடுப்பது அதிகரித்துள்ளதால், தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நலவழித் துறையினா் தெரிவித்தனா்.