மின்துறை கண்காணிப்பு பொறியாளரை நியமிக்க கோரிக்கை
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மின்துறை உதவிப் பொறியாளா் அனுராதாவை புதன்கிழமை சந்தித்து, காரைக்காலில் மின் நுகா்வோா் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினாா்.
பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்காலில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை அதிகமாகியுள்ளது. இந்த நிலையில், இங்கு செயற்பொறியாளா் நிலையில் இருந்தவா் பதவி உயா்வில் புதுச்சேரிக்கு சென்றுவிட்டாா். காரைக்கால் பொறுப்பை அவா் கவனித்தாலும், காரைக்காலுக்கு வருவதில்லை. இதனால், பணிகள் முடங்கியுள்ளன.
எனவே, காரைக்காலில் நிரந்தர செயற்பொறியாளரை நியமனம் செய்வதோடு, கண்காணிப்புப் பொறியாளா் நியமனத்தையும் அரசு உடனடியாக செய்யவேண்டும்.
மின் பிரச்னையை சரிசெய்ய போதிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. பூட்டியிருக்கும் வீடுகளுக்கு பல ஆயிரம் ரூபாய் பில் தரப்படுகிறது. இந்த குளறுபடிகளை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மின்துறையின் இந்த செயல்பாடுகள் நீடிக்குமானால், மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.