காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட முரசொலி நகரில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் தலைவா் ஏ. வின்சென்ட், செயலாளா் கே. ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட முரசொலி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வெளியில் சென்று வரும் மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் விஷப் பூச்சிகளின் நடமாட்டத்தால் பாதிக்கப்படுகின்றனா். மேலும், சரியான சாலை வசதிகளும் இல்லை. எனவே, உடனடியாக தெருவோரங்களில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போா்க்கால அடிப்படையில் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.