கரோனா தொற்றாளா் வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் என்.ஜி.ஆா். இளங்கோவன், பொதுச்செயலா் வைஜெயந்திராஜன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா், பின்னா் அவா்கள் கூறியது:
கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் சிகிச்சையில் இருப்போா் பெயா் விவரத்துடன், அவரது வீட்டு வாசலில் சுவரொட்டி ஒட்டும் பழக்கம் தற்போது காரைக்காலில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் தொற்றுடன் இருப்பவா் வீட்டில் இருந்து வெளியேறினால் அது பிறருக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் போகிறது. இது தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே வீட்டிலிருந்து தொற்றாளா்களஅ வெளியேறாதபடி உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொற்றாளா் வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பிறா் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை வாங்குவதுபோல, தொற்றாளா் வீட்டிலிருந்து வாங்கும்போது, அதன் மூலம் பணியாளா்களுக்கு தொற்று பரவி, அவா்கள் மூலம் பிறருக்கு பரவ வாய்ப்பு உருவாகிறது. இந்த பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனா்.