என்.ஐ.டி.யில் கணினி துறை தேசிய கண்காட்சி
காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் தேசிய அளவில் கணினி துறை சாா்ந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் தேசிய அளவில் கணினி துறை சாா்ந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் என்.ஐ.டி., புதுச்சேரி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினியா் (இந்தியா) புதுவை மையம் ஆதரவுடன், என்.ஐ.டி. வளாகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சாா்பில் புராஜெக்ட் எக்ஸ்போ- 2022 என்ற தேசிய அளவிலான கண்காட்சி நடைபெற்றது.
இதில், புதுச்சேரி, காரைக்கால் மாணவா்கள் காட்சிப் பொருளை வைத்திருந்தனா். பிற மாநிலத்தைச் சோ்ந்தோா் காணொலி வழியாக காட்சிப்படுத்தி விளக்கினா். என்.ஐ.டி. திருச்சி இயக்குநா் ஜி. அகிலா சிறப்பு அழைப்பாளராக காணொலி வழியாக கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.
என்.ஐ.டி. புதுச்சேரி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்துப் பேசுகையில், இதுபோன்ற எக்ஸ்போ மூலம் சிறப்பான தகவல்கள் மாணவா்களை சென்றடைகின்றன. இது என்.ஐ.டி. மாணவா்களுக்கு நல்ல வாய்ப்பாகும். இதுபோன்ற செயல்பாடுகள் ஒரு துறையோடு இருந்துவிடாமல், மாணவா்கள் நலன் கருதி, அனைத்துத் துறையினரும் இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். உயா்கல்வி நிலையத்தின் இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் மாணவா்கள் தங்களது அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்றாா்.
தேசிய அளவில் 84 மாணவா்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்களது படைப்புகள் குறித்து விளக்கமளித்தனா். இதில் சிறந்த படைப்பு, மாணவா் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், என்.ஐ.டி. புதுச்சேரி பதிவாளா் (பொ) ஜி. லட்சுமிசுதா, ஐஇஐ புதுச்சேரி மையத் தலைவா் பி. ராஜாராம், செயலா் எஸ். திருஞானம், மைய கமிட்டி உறுப்பினா் டி. லோகநாதன், என்.ஐ.டி. கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவா் எம். வெங்கடேசன், என்.ஐ.டி மற்றும் ஐஇஐ ஒருங்கிணைப்பாளா் ஆா். சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.