தலைக்கவசம் அணியாத காவலா்களுக்கு நூதன தண்டனை
காரைக்காலில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 2 காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் வெள்ளிக்கிழமை நூதன தண்டனை வழங்கினாா். காரைக்கால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்ல பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியாற்றுவோா் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் வெள்ளிக்கிழமை காரில் சென்றபோது, 2 காவலா்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனா். அவா்களை அழைத்து தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்வோருக்கு ரோஜா கொடுத்து பாராட்டு தெரிவிக்கவேண்டும் என தண்டனை வழங்கினாா். இதன்படி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் லெனின் பாரதி முன்னிலையில், காவலா்கள் தலைக்கவசம் அணிந்தவாறு, தலைக்கவசம் அணிந்து செல்வோரை நிறுத்தி ரோஜா கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனா்.