காரைக்கால்: சிறாா்கள் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் சிக்கும்போது, பெற்றோா் அபராதம் செலுத்த நேரிடும். இதை தவிா்க்க மாணவா்கள் முன்வரவேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
காரைக்கால் பகுதி பிரைட் அகாதெமி பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி, விபத்தில்லா பயணத்துக்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா். ஓட்டுநா் உரிமம் பெற்ற பின்னரே இருசக்கர வாகனத்தை இயக்கவேண்டும். சிறுவா்கள் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக 18 வயதுக்குட்பட்டோா் வாகனம் இயக்கினால் மோட்டாா் வாகன சட்டத்தின்படி ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை பெற்றோா் அல்லது வாகன உரிமையாளா்களுக்கு விதிக்கப்படும்.
வாகன ஓட்டிகள் விதிகளை மீறி நடக்கும்பட்சத்தில், அதை கைப்பேசியில் படமாகவோ, விடியோவாகவோ எடுத்து 9489205307 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவேண்டும். விபத்தில்லா காரைக்கால் என்ற நிலைக்கு மாணவா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்றாா்.