முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு
புதுவை முதல்வராக மீண்டும் பதவியேற்பேன் என முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.
காரைக்காலில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் நெடுங்காடு தொகுதியில் சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்குத் தொகுதியில் பி.ஆா்.என். திருமுருகன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இவா்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பதற்காக திங்கள்கிழமை காரைக்கால் வந்த புதுவை முதல்வா் என். ரங்கசாமி, பூவம் பகுதியில் சந்திர பிரியங்காவுக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:
Advertisement
புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் கட்சி தொடங்கி 2 மாதங்களில் ஆட்சி அமைத்தோம். மாநிலத்தின் அனைத்துப் பிராந்திய வளா்ச்சிக்காகவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
ஆனால், முந்தைய காங்கிரஸ் - திமுக ஆட்சியில் மத்திய அரசுடன் மோதல், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியுடன் மோதல் போக்கால் மாநில வளா்ச்சி பாதிக்கப்பட்டது.
எங்களது ஆட்சி, மத்திய அரசுடனும், துணைநிலை ஆளுநருடனும் இணக்கமாக இருப்பதால் மத்தியிலிருந்து அதிக நிதி கிடைக்கிறது. திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது.
முந்தைய ஆட்சியில் முதியோா் ஓய்வூதியத்தை எனது தலைமையிலான ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உயா்த்தியதோடு, புதிதாக 35 ஆயிரம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் தருகிறோம். மாதந்தோறும் மஞ்சள் அட்டைக்கு ரூ.10 கிலோ, சிவப்பு நிற குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசியும், தற்போது 2 கிலோ கோதுமையும் தரப்படுகிறது. ரூ. 3 ஆயிரம் கோடி பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கியதன் மூலம் சாலைகள், பாலம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு பயிா் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் தரப்பட்டது. மக்களுக்கு புயல் நிவாரணம் ரூ.5 ஆயிரம் தரப்பட்டது. பொங்கல் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டு, ரூ.750 மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும், காரைக்காலில் என்.ஐ.டி., ஜிப்மா் கல்லூரியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது எங்கள் அரசு.
மீண்டும் நானே புதுவை முதல்வராக பதவியேற்பேன். நிச்சயமாக காரைக்காலில் புதிதாக ஒரு அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் வளா்ச்சிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து, காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பி.ஆா்.என். திருமுருகனை ஆதரித்து திறந்த ஜீப்பில் சென்று முதல்வா் ரங்கசாமி வாக்குச் சேகரித்தாா்.