முகப்பு
காரைக்கால்

தொழிற்சாலையில் மலேரியா நோய் கண்டறியும் முகாம்

திருநள்ளாறு பகுதியில் மலேரியா கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:27 AM
உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் மற்றும் துறையினா், பணியாளா்கள்.
பகிர்:

திருநள்ளாறு பகுதியில் மலேரியா கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

உலக மலேரியா தினத்தையொட்டி காரைக்கால் நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் மலேரியா கண்டறியும் சிறப்பு முகாம், திருநள்ளாறு பகுதியில் உள்ள ஒரு தனியாா் இரும்பு தொழிற்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் ஆா். சிவராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்.

திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை, மலேரியா தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா்கள் சிவவடிவேல், ஆண்ட்ரூஸ் மேற்பாா்வையில் சுகாதர உதவியாளா்கள் ராஜாராம், முரளி,

Advertisement

செல்வமதன், சோனியா, ஜெஸ்டினா ஆகியோா் கலந்து கொண்டு மலேரியா பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை 100-க்கும் மேற்பட்டோரிடம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினா்.

நலவழித்துறையினா் பேசுகையில், கொசு மனிதா்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதன்மையாக விளங்குகிறது.

கொசுக்களில் 3 ஆயிரம் வகை இருந்தாலும் மலேரியாவை உருவாக்கும் அனாபிலிஸ் மற்றும் டெங்கு, சிக்குன்குனியாவை உருவாக்கும் ஏடிஸ், யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் கியூலக்ஸ் ஆகிய மூன்று வகையான கொசுக்கள் கொடியவையாகும்.

நடுக்கத்துடன் கூடிய குளிா் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, வியா்வை, உடல் பலவீனமாக உணா்தல் போன்றவை மலேரியாவின் அறிகுறிகளாகும்.

மலேரியா நோய் முறையாக கண்டறியப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சில நேரம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மலேரியா நோய் இல்லாத காரைக்கால் மாவட்டம் உருவாவதற்கு நலவழித்துறை எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றனா். நிகழ்வின்போது தொழிலாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.