புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் அறிவுறுத்தலில், வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளும் விதமாக, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து, மாதிரி வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகங்களில் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், அவ்வையாா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளான முதல் வாக்காளா்கள் பலா் புதன்கிழமை சென்று வாக்களித்து, சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் முனைவா் எம். தாமோதரன் மற்றும் உறுப்பினா்கள், அவ்வையாா் கலை கல்லூரியின் தோ்தல் எழுத்தறிவு கழக ஒருங்கிணைப்பாளா்கள் முனைவா் கே. கமலி, முனைவா் பூஜா வைஷ்ணவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.