காரைக்காலில் 2 நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமாா் 4,500 ஹெக்டா் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுவை அரசின் முயற்சியால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இந்திய உணவுக் கழகத்தால் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் மாதூரில் உள்ள அரசு விதைப் பண்ணை ஆகிய 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கிரேடு ‘ஏ ‘ ரகம் குவிண்டால் ரூ. 2,389, பொது ரகம் குவிண்டால் ரூ. 2,369- க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட தரக் குறியீடுகளின் அடிப்படையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் ஈரப்பதம் 17 சதம் கலப்பு 6 சதம், முதிராத சுருங்கிய தானியங்கள் 3 சதம், நிறம் மங்கிய சேதமடைந்த தானியம் 5 சதம் போன்ற தரக்குறியீடுகள் இருக்க வேண்டும். நன்கு தூற்றி சுத்தம் செய்யப்பட்ட நெல்லையே கொண்டுவர வேண்டும். நெல் கொண்டு வரும் விவசாயிகள் ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தின் நகலை கொண்டுவர வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகள் வங்கிக் கணக்கில் 2 நாட்களுக்குள் செலுத்தப்படும். எனவே, காரைக்கால் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.