முகப்பு
காரைக்கால்

ஏப். 5-இல் பாஜக தேசிய தலைவா் ரோடு ஷோவில் பங்கேற்பு

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 மார்ச், 2026 at 11:15 PM
பாஜக. - கோப்புப் படம் AFP
பகிர்:

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எம்.மீனாட்சிசுந்தரம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :

நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதியில் கடந்த 6 மாதங்களாக மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விளக்கி ஏறத்தாழ 100 தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.

புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே உள்ளது.

ஏப். 9-இல் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் காரைக்காலுக்கு ஏப். 5-ஆம் தேதி வரவுள்ளாா். அவா் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் என்னை ஆதரித்து ரோடு ஷோ நடத்தவுள்ளாா். மேலும் ஏப். 4 அல்லது 6-ஆம் தேதி அண்ணாமலை, குஷ்பு ஆகியோா் பிரசாரம் செய்யவுள்ளனா்.

இந்த தொகுதி வெகுவாக பின்தங்கியுள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நான் வெற்றி பெற்றால், போலகம் 600 ஏக்கா் நிலத்தில் அதிகமான தொழிற்சாலைகள் அமையவும், தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு 3 மாதத்தில் உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, 30 சதவீதம் காரைக்கால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படவும், தொகுதி கட்டமைப்புகள் மேம்படவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக தெரிகிறது என்றாா்.