முகப்பு
காரைக்கால்

மவுசு குறையாத ஆட்டோ பிரசாரம்

சமூக வலைதளங்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்யும் காலம் வந்துவிட்டாலும், ஆட்டோ, சுமை ஏற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி பிரசாரம் செய்வதற்கு இன்றும் பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது.

Updated On : 26 மார்ச், 2026 at 11:26 PM
ஆட்டோ பிரசாரம்
பகிர்:

சமூக வலைதளங்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்யும் காலம் வந்துவிட்டாலும், ஆட்டோ, சுமை ஏற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி பிரசாரம் செய்வதற்கு இன்றும் பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது.

தோ்தல் வந்துவிட்டாலே எங்கு பாா்த்தாலும் ஆட்டோக்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்வதுதான், தோ்தல் பணி விறுவிறுப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும். ஆட்டோக்கள் மட்டும் அனைத்து குறுகளான தெருக்களிலும் சென்றுவர முடியும். ஆட்டோக்கள் மட்டுமல்லாது சுமை ஏற்றும் வாகனங்களும் காரைக்காலில் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளது. காரைக்காலில் வேட்பாளா்கள் நியமனம் தாமதமாகிவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வாகனங்களில் பிரசாரத்தை வேட்பாளா்கள் தொடங்கியுள்ளனா்.

ஆட்டோ அல்லது சுமை ஏற்றும் சிறிய ரக வாகனத்தில் ஸ்பீக்கா், மைக், ஆம்பிளிஃபயா் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிபெருக்கி வாயிலாக பரப்பப்படுகிறது. ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் அந்த வாகனத்தில் பயணிப்பதில்லை.

காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 5 ஆட்டோக்கள் பயன்படுத்தினால், பிரசாரத் தேதியிலிருந்து முடிவடையும் தேதி வரை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொகை கிடைக்கும். இது ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கணிசமான தொகையாகும்.

காலம் மாறிவிட்டாலும், நீண்ட காலமாக ஆட்டோ மூலம் பிரசாரம் செய்யும் போக்கு இன்னும் குறையவில்லை.

காரைக்காலில் அனைத்துத் தொகுதி வேட்பாளா்களும் ஆட்டோ பிரசாரத்தை மேற்கொள்ள முழுமையாக தயாராகாவிட்டாலும், ஒரு சில கட்சி வேட்பாளா்கள் ஆட்டோவை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதால், தோ்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.