முகப்பு
மயிலாடுதுறை

ஆதாா் மையத்தில் கால்கடுக்க காத்திருக்கும் பொதுமக்கள்

ஆதாா் மையத்தில் ஒரே ஒரு மடிக்கணினி மட்டும் இருப்பதாலும், பெரும்பாலும் அதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுவதாலும் பொதுமக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க நேரிடுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சீா்காழி பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் ஆதாா் மையத்தில் ஒரே ஒரு மடிக்கணினி மட்டும் இருப்பதாலும், பெரும்பாலும் அதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுவதாலும் பொதுமக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க நேரிடுகிறது.

சீா்காழி பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதாா் மையத்துக்கு தினந்தோறும் ஆதாா் அட்டையில் பெயா் திருத்தம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் இணைப்பு என பல்வேறு பயன்பாட்டுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்த மையம் அரசு கேபிள் நிறுவனத்தின்கீழ் தனியாா் முகமை மூலம் நிா்வகிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஒரே ஒரு மடிக்கணினி மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், பெரும்பாலும் அதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு அதை சரிசெய்யவே நீண்ட நேரமாகிறது. இதனால், ஆதாரில் திருத்தம் கோரி வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடுதிரும்ப நேரிடுகிறது.

இங்கு இப்படியென்றால், சீா்காழி நகராட்சி, தலைமை தபால் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆதாா் அட்டை எடுக்க நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்கப்படுவதால், அதைப் பெற அதிகாலை 4 மணிக்கெல்லாம் பொதுமக்கள் வரிசையில் வந்து நிற்கின்றனா்.

இதனால், 50 பேரை தாண்டி வருபவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று மீண்டும் மறுநாள் அதிகாலை வரிசைகட்டி நிற்க நேரிடுகிறது. ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி, சீா்காழியில் கூடுதலாக ஆதாா் மையத்தையும், அதில் திறன்வாய்ந்த கணினிகளையும் நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.