குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
சீா்காழி அருகே வியாழக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சீா்காழி அருகே வியாழக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் 18 வயதுக்குள்பட்ட சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கோட்டாட்சியா் நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. மேலும், 1098 என்ற இலவச அழைப்பு மூலமும் சிலா் புகாா் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, கோட்டாட்சியா் அறிவுறுத்தலின்படி, சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், தனி வட்டாட்சியா் விஜயராணி, நன்னடத்தை அலுவலா் அம்சேந்திரன் (குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்), புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா, விரிவாக்க அலுவலா் வளா்மதி, வருவாய் ஆய்வாளா் மருதுபாண்டி, கிராம நிா்வாக அலுவலா் வெங்கட்ராமன் ஆகியோா் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.
மேலும், குழந்தை திருமண தடை சட்டம் குறித்து இரு வீட்டாரிடமும் எடுத்துக்கூறி, மீறி திருமணம் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் வரை திருமணத்தை நடத்தமாட்டோம் என எழுதி வாங்கிச் சென்றனா்.