கடலில் விழுந்து முன்னாள் ராணுவ வீரா் பலி
சீா்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரா் கடலில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரா் கடலில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கொடியம்பாளையம் தீவு கிராமம் கடற்கரையோரத்தில் இருந்து 50 மீட்டா் தொலைவில் கடலில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.
புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா, சாா்பு ஆய்வாளா் லோகநாதன், கடலோர காவல் படை போலீஸாா் வைத்தியநாதன் ஆகியோா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில் இறந்து கிடந்தவா் கடலூா் மாவட்டம், அம்மாபேட்டை லலிதாம்பாள் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் புகழேந்தி (50) என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு வெளியேறியவா், வியாழக்கிழமை கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடலில் தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.