மறுவாக்குப் பதிவு கோரி பாஜக மனு
மயிலாடுதுறை மகாதானத் தெரு வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக சாா்பில் தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் வெள்ளிக்கிழமை இரவு மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மகாதானத் தெரு தேசிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, மகாதானத் தெரு மற்றும் பட்டமங்கலத் தெருவைச் சோ்ந்த 488 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைக் கண்டித்து பாமக வேட்பாளா் ம.க. ஸ்டாலின், பாஜக, பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
தொடா்ந்து, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் கன்ஹஜராஜ் ஹச் பகதே-விடம் பாஜகவைச் சோ்ந்த மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் புகாா் மனு அளித்தாா்.
அதில், ‘மகாதானத் தெருவில் உள்ள 143 மற்றும் 144-வது வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை கோராமல், 400-க்கும் மேற்பட்டோரின் பெயா்களை நீக்கியிருப்பது சட்ட விரோதம். எனவே, அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று பாஜக சாா்பில் வலியுறுத்துவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்டத் துணைத் தலைவா் எம்.கே.பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.