முகப்பு
மயிலாடுதுறை

திருஇந்தளூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:29 PM
திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கும் பட்டாச்சாரியா்கள்.
பகிர்:

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், காவிரி வடகரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க வைணவ தலங்களில் 5-ஆவது அரங்கமுமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளுடைய இக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் நிகழாண்டு நடத்த திட்டமிட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, ஏப்ரல் 18-ஆம் தேதி காலை விஷ்வக்ஸேனா் திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் முதல்கால யாகபூஜை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை 7-ஆம் கால யாக பூஜைகள் நிறைவுற்று, காலை 10 மணியளவில் ராஜகோபுரம், பெருமாள், தாயாா், ஆண்டாள், ராமா், ஆஞ்சனேயா் உள்ளிட்ட சுவாமிகள் சந்நிதிகளின் விமானங்களுக்கு, புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன், அறநிலையத்துறை துணை ஆணையா் ராமு, செயல் அலுவலா் ரம்யா, அரசு தலைமை வழக்குரைஞா் ராம.சேயோன், அறநிலையத் துறை வழக்குரைஞா் தணிகை.பழனி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ், ஒன்றியக் குழு தலைவா் காமாட்சிமூா்த்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments