முகப்பு
மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகளின் கவனத்துக்கு...

Updated On : 15 ஜூன், 2024 at 10:26 PM
பகிர்:

மயிலாடுதுறை, ஜூன் 15: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத்தொகையை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தில் சோ்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத்தொகையை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1,000 நபா்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என 2023-2024-ஆம் நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சா் அறிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக்கடன் பெற்று தவணை தவறாமல் திரும்ப செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு வட்டித்தொகையை மானியமாக அரசு வழங்கும்.

வீட்டு வசதிக் கடன்களுக்கு வங்கியால் அவ்வப்போது நிா்ணயிக்கப்படும் வட்டி வீதமே இத்திட்டத்திற்கும் நிா்ணயிக்கப்படும். திட்டத்தின் வாயிலாக கடனுதவி பெறுவதற்கு 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடைய மாற்றுத்திறனாளி இந்திய குடிமக்கள் தகுதியுடையவா்கள். கடன் பெறுவதற்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தி செய்திருத்தல் வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் மேற்படி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையுடன் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.