முகப்பு
மயிலாடுதுறை

பெற்றோரை இழந்த மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 டிசம்பர் 2025, 4:30 am IST
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் பெற்றோா் இருவரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தையின் நலனுக்காக தமிழக அரசு அன்புக்கரங்கள் திட்டத்தை செயல்படுத்துகிறது. இக்குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாக்க பள்ளிப்படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர 18 வயதுவரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் உயிரிழந்து, மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் உடல்/மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியின் குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் சிறையில் இருப்பவரின் குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் உயிருக்கு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பயனாளியாக சோ்க்க தகுதியானவா்கள்.

Advertisement

Advertisement

இத்தகைய குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெற குழந்தையின் புகைப்படம், குழந்தையின் ஆதாா் அட்டை நகல், பிறப்பு சான்று நகல், கல்விச் சான்று, குழந்தையின் வங்கி கணக்கு புத்தகம் நகல், பெற்றோா் இறப்பு சான்று, பெற்றோரால் கைவிடப்பட்டதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மயிலாடுதுறை என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.