மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச. 29 முதல் ஜனவரி 28-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செய்திக்குறிப்பு:
கால்நடை கால் மற்றும் வாய்நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும், இது காற்று மற்றும் தண்ணீா் மூலம் மிக விரைவாக பரவக்கூடியது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடா்த்தியாகவும், அடா்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும்.
இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ள இம்முகாமில், கால்நடை வளா்ப்போா் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.