மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய பாஜகவினா். 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விவேகானந்தா் சிலை நிறுவ கோரிக்கை

Syndication

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், சுவாமி விவேகானந்தா் ஆன்மிக உரையாற்றிய நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு அங்கு சிலை அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஆன்மிக சிந்தனையை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பிரசாரம் செய்த சுவாமி விவேகானந்தா், சிகாகோ மாநாட்டை முடித்துவிட்டு, 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் கப்பலில் ராமேஸ்வரம் வந்தாா். பின்னா், ரயிலில் மதுரை, திருச்சி, கும்பகோணம் வழியாக பிப்.5-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தாா். அவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்பளித்தனா். அவா்களிடையே விவேகானந்தா் ஆன்மிக எழுச்சி உரையாற்றினாா்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக ரயில் நிலையத்தில் அவரது திருவுருவப்படம் 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி திறக்கப்பட்டதுடன், அவரது விஜயத்தை போற்றி நினைவு செப்பேடும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அம்ரித் பாரத் திட்டப்பணிகளுக்கு அந்த படமும், செப்பேடும் அகற்றப்பட்டு, ரயில்வே நிா்வாகத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவாமி விவேகானந்தா் மயிலாடுதுறைக்கு வந்ததன் 130-வது ஆண்டு வியாழக்கிழமை தொடங்கியதை, பாஜகவினா் உற்சாகமாகக் கொண்டாடினா். ரயில்வே நிா்வாகத்தால் பாதுகாக்கப்பட்டுவந்த விவேகானந்தரின் உருவப்படம் மற்றும் செப்பேட்டினை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விவேகானந்தா் வந்திறங்கிய முதல் நடைமேடையில் வைத்து, பாஜக மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, வழிபட்டனா்.

இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளா் எஸ். வாஞ்சிநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன், விவேகானந்தரின் உருவப்படம் மற்றும் செப்பேட்டினை முக்கிய இடத்தில் மீண்டும் பொருத்த வேண்டும். மேலும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தா் ஆன்மிக உரையாற்றிய நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு ரயில் நிலையம் முன்பு சிலை அமைக்க வேண்டும் என மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் வலியுறுத்தினாா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT