மயிலாடுதுறையில் பிப். 27-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்
மயிலாடுதுறையில் 4-ஆவது புத்தகத் திருவிழா பிப். 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கூறியது:
மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தக திருவிழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் பிப். 27-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 8-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில், தமிழகம் முழுவதும் பல்வேறு பதிப்பகங்களில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement
இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 40 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளும் இடம்பெறுகிறது. மாணவா்களுக்கு போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள தேவையான புத்தகங்களும், வாசிப்பாளா்களுக்கான புத்தகங்களும் கிடைக்கும்.
20-க்கு மேற்பட்ட புகழ்பெற்ற பேச்சாளா்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. எனவே, அனைவரும் இப்புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.