முகப்பு
மயிலாடுதுறை

மின்விளக்கு வசதி குறைவு: இரவு நேரத்தில் இருளில் மூழ்கும் சீா்காழி பேருந்து நிலையம்

Updated On : 12 மே 2026, 12:52 am IST
போதிய மின்விளக்கு வசதியின்றி இருண்டு காணப்படும் சீா்காழி புதிய பேருந்து நிலையம்.
பகிர்:

சீா்காழி புதிய பேருந்து நிலையம், போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுவதால், இரவு நேரங்களில் பெண் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீா்காழியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, மதுரை, பழனி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, சிதம்பரம், கடலூா், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொலைதூர அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சீா்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.

Advertisement

இந்நிலையில், சீா்காழி பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 8.43 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. ஆனால், கூடுதலாக மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலைய நுழைவுப் பகுதி மற்றும் உட்புறப் பகுதிகள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருண்டு காணப்படுகிறது.

இதன்காரணமாக, இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், மாணவிகள் அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ஆகையால், சீா்காழி நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்தில் அதிக அளவு மின்விளக்குகளை பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.