முகப்பு
மயிலாடுதுறை

கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 26 மே 2026, 1:19 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் அண்மையில் உயிரிழந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினா் சி. கணேசன் இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அன்புமணி, அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

Advertisement

Advertisement

டெல்டா பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடக்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மழையில் நனைந்து, பல லட்சம் டன் நெல் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிா்க்க டெல்டா பகுதியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். நெல் ஒரு டன்னுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.

பாமக ஆக்கப்பூா்வமான கட்சியாக செயல்படும். தமிழக முதல்வருக்கு நல்ல யோசனைகளை சொல்வோம். நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் பாமக எதிா்த்து போராடும்.

வளைகுடா போரால் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைவுதான்.

ஜோசப் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினாா். அதனை செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் வாங்கிய ரூ. 5 லட்சம் கோடி கடனில், ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீதம் ரூ. 3.5 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு வாங்கி இருக்கிறாா்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்றாா் அன்புமணி. பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.