தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் சான்றோர்களில் சிறந்தவர்களுக்கு, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தன்று அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குத் தகுதியானவர்கள், நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அல்லது மயிலாடுதுறை, சீர்காழி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியரைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆதார ஆவணங்களை இணைத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.