அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தூரில் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி தங்கும் விடுதியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில நாள்களில் பெய்த மழைநீர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சூழ்ந்தது. மழை விட்டும் இதுவரை வடியவில்லை. 2 அடி ஆழத்துக்கு தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் உள்ளதால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.