மயிலாடுதுறை கூறைநாடு அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாலியர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து, மாலையில் அருள்மிகு சாந்தநாயகி அம்பாளுக்கும் அருள்மிகு புனுகீசுவரர் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
பின்னர், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, திருமணக்கோலத்தில் சுவாமி அம்பாள் பிரகாரம் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.