நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தரிசாக உள்ள விளைநிலப் பரப்பில் திடீரென பரவிய தீயால், சவுக்கு மரங்கள், வேலிகள் புதன்கிழமை எரிந்து நாசமாகின.
வேதாரண்யத்தில் பல மாதங்களாக மழையில்லாத நிலை நீடித்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக தரிசாக உள்ள விளைநிலங்களில் வளர்ந்த புல், பூண்டு, தாவரங்கள் கருகி காணப்படுகின்றன. இந்நிலையில், வேதாரண்யம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலப் பரப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ, அருகில் இருந்த சவுக்கு மரங்கள், தாழை, முள்வேலிகளில் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ பரவியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.