வயதுச் சான்று இல்லாமல் திருமண கூடங்களை ஒதுக்கீடு செய்யக் கூடாது: ஆட்சியர் உத்தரவு
மணமக்களின் வயதுச் சான்று பெறாமல் திருமணக் கூடங்களை ஒதுக்கீடு செய்யக் கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மணமக்களின் வயதுச் சான்று பெறாமல் திருமணக் கூடங்களை ஒதுக்கீடு செய்யக் கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் உள்ள திருமணக் கூடங்கள், கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்துவ ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் மணமக்களின் வயதுச் சான்றைப் பெற வேண்டியது அவசியம். மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே திருமணங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் திருமண இடங்களின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், திருமண வயதை அடையாத குழந்தைகளுக்கு எங்கேனும் திருமணம் நடைபெற்றதாக கண்டறியப்பட்டால், தொடர்புடைய குழந்தைகளின் பெற்றோர், திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.