ஏப். 21-இல் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் விழா
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் விழா வரும் 21-ஆம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் விழா வரும் 21-ஆம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது.
சீர்காழியில் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரமபுரீசுவரர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் திருநிலைநாயகி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி, ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு வரும் 20-ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, முக்கிய விழாவான திருமுலைப்பால் திருவிழா 21-ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணியளவில் தருமை ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் தலைமையில், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
மேலும், சமயக்குறவர்கள் நால்வருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து, திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் பிரம்மத்தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருளுகிறார். அப்போது, மலைக்கோயிலில் இருந்து உமாமகேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்து தங்கக் குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு கொடுத்து அருள்பாலிக்கிறார். இதையடுத்து, சிவபெருமானுடன், உமாமகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருஞானசம்பந்தருக்குக் காட்சியளிப்பார்கள். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு சிறப்புத் தீபாரதனை நடைபெறுகிறது.
ஏப். 22-ஆம் தேதி சமணர்கள் தோற்றோடுதல், 23-இல் புஷ்பவிமான காட்சி, 24-இல் சகோபுரத்தில் சுவாமிகள் எழுந்தருளல், 25-இல் திருக்கல்யாணம் உற்சவம், 26-இல் தேதி பிஷாண்டவர் உத்ஸவம், 27, 28-ஆம் தேதிகளில் தேர்த் திருவிழா, 29-இல் தீர்த்தவாரி, 30-இல் மெளன உத்ஸவம், மே 1-ஆம் தேதி எதிர்க்காட்சி உத்ஸவம், 2-ஆம் தேதி தெப்போத்ஸவம், 3-ஆம் தேதி சண்டிகேசுவர் உத்ஸவம் மற்றும் 11-ஆம் தேதி முத்துச்சட்டைநாதர் உத்ஸவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டளைப்படி, கோயில் கண்காணிப்பாளர் தியாகராஜன், கணக்கர் செந்தில் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.