புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும், நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான உதவிப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிவாரணத் தொகுப்புகளை நாகை துறைமுக சரக்குகள் பாதுகாப்பு கிடங்குகளில் இருந்து, நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செம்பியன் மாதேவி, ஒரத்தூர் ஆகிய கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் (கஜா புயல் சிறப்புப் பணி) சுப்புலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியர் (சிறப்புப் பணி) கண்ணன், வட்டாட்சியர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.