"பாஜகவை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை'
பாஜகவை விமர்சிக்க திமுகவுக்கு எவ்வித தகுதியும் இல்லை என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.
பாஜகவை விமர்சிக்க திமுகவுக்கு எவ்வித தகுதியும் இல்லை என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.
நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு பாஜக தேசியச் செயலர் எச். ராஜா புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் சீரழிந்து விட்டன. எனவே, திராவிட கட்சிகளை மக்கள் அகற்ற வேண்டும். காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பாஜகவை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தை இல்லை. நதிநீர் பங்கீடு திட்டம் அமைக்க வேண்டும் என்றுதான் உள்ளது. அதை மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரி விவகாரத்தில் தேவையான தண்ணீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் ராஜா. பேட்டியின்போது, பாஜக நாடாளுமன்ற இணை பொறுப்பாளர் அகோரம், நாகை மாவட்ட பாஜக பொதுச் செயலர் அமிர்த. விஜயகுமார், ஒன்றியச் செயலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தமிழகத்தில் பெரியார் சிலை மற்றும் திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு குறித்து எச். ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் பி. சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் எச். ராஜாவுக்கு எதிராக கோயில் வாசல் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் பிரச்னை ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.