மக்கள் குறைதீர் கூட்டம்: தீண்டாமை இல்லாத கிராமமாக தேர்வுப் பெற்ற தேவூர் ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் பரிசு
நாகை மாவட்டத்தில் தீண்டாமை இல்லாத கிராமமாக தேர்வு செய்யப்பட்ட தேவூர் ஊராட்சிக்குப் பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் தீண்டாமை இல்லாத கிராமமாக தேர்வு செய்யப்பட்ட தேவூர் ஊராட்சிக்குப் பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், 2017-18-ஆம் ஆண்டில் தீண்டாமை இல்லாமல், மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்ட கீழ்வேளூர் வட்டம், தேவூர் ஊராட்சிக்கான பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை உத்தரவு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 10 பேருக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி, பாம்பு கடித்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை, ஊரக வளர்ச்சித் துறையில் ஒருவருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை ஆகியன வழங்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 186 மனுக்களும், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 17 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.