வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மழை நீர் தேங்கிய விளை நிலங்களை வேளாண் துணை இயக்குநர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தலைஞாயிறு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிகழாண்டு சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கன மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அனைத்து பரப்புகளுக்கும் விவசாயிகளை பயிர்க் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
இதுவரை, சுமார் 70 சதவீத விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். மற்ற விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். இதற்காக அனத்து பகுதிகளிலும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
முன்னதாக தலைஞாயிறு 5-ஆம் சேத்தியில் தாழ்வான நிலப்பரப்பு வயல்களில் மழை நீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநர் கருப்பையா, வேளாண் துணை அலுவலர் ஜீவகன், விதை அலுவலர்கள் ரவி, ஜீவானந்தம், வேளாண் உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன், தமிழரசன், ஆறுமுகம், ஜெயகுமார், கூட்டுறவு வங்கி செயலர் முருகதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.