வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில், 228 பயனாளிகளுக்கு சுமார் ரூ.32,13,867 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசியது:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்து அதன்மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வேதாரண்யம் வட்டம் பன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், 2017-2018-ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 536 பேருக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.20.61 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2018-2019 நிதியாண்டில் 890 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.22 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் தொடர்பு முகாமையொட்டி, ஏற்கெனவே 119 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 76 மனுக்கள் ஏற்கப்பட்டு, 43 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டன.
குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு வைப்புத்தொகை ரசீதுகளும் அளிக்கப்பட்டன.
வேளாண், தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 228 பயனாளிகளுக்கு சுமார் ரூ.32,13,867 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கே.ராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வேதாரண்யம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.