வேதாரண்யம் அருகே காதலர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகட்டூர் கிராமம், சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகள் சிவரஞ்சனி (17). இதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ரவிசங்கர் (20). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிவரஞ்சனியின் பெற்றோர் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதேசமயம், சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிய ரவிசங்கர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
ஞாயிற்றுக்கிழமை ஜெயராமனின் வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, மின் விசிறிகளில் சிவரஞ்சனியும், ரவிசங்கரும் தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. வாய்மேடு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வேம்பரசி மற்றும் போலீஸார் அவர்களது சடலங்களை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.