கொள்ளிடம் பகுதியில் நேரடி கொள்முதல் மையம் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 200 கிராமங்களில், 12 ஆயிரத்து 614 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் சம்பா நடவுப்பயிர் செய்துள்ளனர். தற்போது அறுவடை அதன் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை உடனடியாக விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டால், விவசாயிகள் இருப்பு வைக்காமலும் சேதமின்றியும் விற்பனை செய்ய இயலும். இதனைக் கருத்தில் கொண்டு, நேரடி கொள்முதல் மையத்தைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.