நாகையை அடுத்த நாகூர் ரயில் நிலையத்தில், ரயில் பயணி ஒருவரின் செல்லிடப் பேசி பறிக்கப்பட்டது தொடர்பாக பயணிகளுக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, காரைக்கால் - சென்னை ரயில் இயக்கம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது.
காரைக்கால் - சென்னை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு நாகூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. 2 நிமிடங்கள் இடைவெளியில் இந்த ரயில் நாகையை நோக்கிப் புறப்பட்டது. அப்போது, ரயிலில் பயணித்த சென்னை புறநகர் அம்பத்தூரைச் சேர்ந்த பார்வதி என்பவரின் செல்லிடப்பேசியை மர்ம நபர் ஒருவர் பறித்துள்ளார். மற்றொருவர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்துள்ளார். இதையடுத்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்த ரயில் பயணிகள் பலரும் நாகூர் ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததே திருட்டுச் சம்வபத்துக்குக் காரணம் எனக் கூறி, ரயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்புடைய அதிகாரிகள் நேரில் வந்து பதிலளிக்கும் வரை, ரயிலை இயக்கக் கூடாது எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ரயில் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பார்வதியிடமிருந்து புகாரைப் பெற்று, ரயில்வே போலீஸார் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளித்ததன் பேரில், பயணிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதன் காரணமாக, இரவு 9.20 மணிக்கு முன்பாக நாகூரிலிருந்து புறப்பட வேண்டிய காரைக்கால் - சென்னை விரைவு ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகி சுமார் 10. 20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.