முகப்பு
நாகப்பட்டினம்

ஓராண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு முன்பு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Updated On : 24 ஜனவரி 2019, 2:58 am IST
பகிர்:

வேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு முன்பு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் கிராமம் முத்துக் கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவகுமார்(30) திருமணமாகாதவர். இவர், அருகில் உள்ள வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த சிவகுமார், கடந்த 24.1.2018 அன்று காணாமல் போனார். இதையடுத்து, மறுநாள் (25.1.2018) காலையில், வெள்ளப்பள்ளம், புது ஏரியில் கொலை செய்யப்பட்டு சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளப்பள்ளம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த, இதே ஊரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் காசிநாதன் மகன் அகிலன்(40), கவுண்டர்காடு நாகராஜன் மகன் கார்த்திக் (29), கத்தரிப்புலம் பனையடிக் குத்தகை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அடைக்கலராஜ் (23), இதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ஐயப்பன், நாகக்குடையான் கிராமம், வாடிவெளி பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் ரகுபதி (24) ஆகிய 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆசிரியர் சிவகுமார் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் வேதாரண்யம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.