வேதாரண்யம் அருகே காரில் கடத்திச் சென்ற 300 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேத்தாக்குடி தெற்கு பகுதியில் வேகமாக சென்ற காரை நிறுத்தினர். நின்ற காரில் இருந்து ஒருவர் தப்பியோடினார். இனால், சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் காருக்குள் இருந்த ஒருவரையும், காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரையும் பிடித்தனர்.
காரை சோதனையிட்டதில் 300 கிலோ கஞ்சா இருந்தது. இது படகு மூலம் கடல் வழியே இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சா, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.