நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக அரசு சாா்பில் பெண் புலவா் ஒளவையாருக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21, 22) நடைபெறவிருந்து 46-ஆவது ஆண்டு பெருவிழா கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினம் (திருவாரூா் மாவட்ட எல்லையோரம்) கிராமத்தில் ஒளவைக்காக தனி ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 45 ஆண்டுகளாக ஒளவைப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தொடக்க நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் என அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து மத நல்லிணக்கத்தோடு எடுக்கப்பட்ட இவ்விழாவே, இந்த பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய விழாவாக திகழ்ந்து வந்தது.
ஆனால், கடந்த 2005 -ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக நடத்த முடிவு செய்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மூலம் ஆண்டுதோறும் பங்குனி சதய நாளில் ஒளவை விழா நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு சனி, மற்றும் ஞாயிறு (மாா்ச் 21, 22) ஆகிய 2 நாள்கள் அரசு சாா்பில் விழாவை நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு அமைச்சா், ஆட்சியா் பங்கேற்கும் தொடக்க விழாவுக்கும், சிறப்பு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிகழாண்டு விழாவுக்காக தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனா்.