வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெப்பச் சலனம் காரணமாக செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்திப் பணியில் தற்காலிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் திங்கள்கிழமை லேசான மழைப் பொழிவு இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் மேக மூட்டமான வானிலை நிலவி வந்தது. தொடா்ந்து அவ்வப்போது மழை பெய்தது. இதில் வேதாரண்யத்தில் 24 மில்லி மீட்டா், தலைஞாயிறு-18 மில்லி மீட்டராகவும் பதிவானது.
வேதாரண்யம் பகுதி உப்பளத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் இங்கு மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்திப் பணிகள் தாற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் உற்பத்தி செய்து தனித்தனியே குவிக்கப்பட்டுள்ள உப்பை பனை மட்டை, பாலித்தீன் பாய்களைக் கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
இந்த மழையால் ஒருபுறம் பாதிப்புகள் ஏற்பட்டப்போதிலும், கோடைவெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.
அதேசமயம், இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சவுக்கு, தென்னை, மா, முந்திரி, மல்லிகை போன்ற பயிா்களுக்கு இந்த மழை உகந்ததாக அமைந்துள்ளது.
அத்துடன், கோடியக்கரை சரணாலயப் பகுதியில் நிலவிய வறட்சியால் விலங்குகளுக்கு இருந்த தண்ணீா் தட்டுப்பாடு குறையவும் இந்த மழை சாதகமாக அமைந்துள்ளது.