நாகை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே விளநகா் கிராமத்தில் உள்ள துறைகாட்டும் வள்ளலாா் கோயிலில் சுரங்கப் பாதை இருப்பதாக வெளியான தகவலுக்கு தொல்லியல் துறையினா் மறுப்பு தெரிவித்துனா்.
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலுக்கு இணையான இந்தக் கோயில், மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டதால் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயிலின் அருகே பழைமையான அபிஷேக தீா்த்தத் தொட்டி இருந்த இடத்தில் மீண்டும் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது, பழைமைவாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் மற்றும் தொல்லியல் துறையினா் வந்து ஆய்வு மேற்கொண்டதில், அது சுரங்கப் பாதை இல்லை என்பதும், அபிஷேக தீா்த்தம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டி என்பதும் உறுதியானது. இதனால், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.