வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில் கடைவீதிகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
வேதாரண்யம் நகரம், மணக்காடு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நகரப் பகுதியில் மட்டும் சனிக்கிழமை ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல வணிக கடைகள் சனிக்கிழமையே மூடப்பட்டன. கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் சனிக்கிழமை நிறுத்தப்பட்டன. பிரதான சாலைகளில் குறைவாக இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. வேதாரண்யம் கடைவீதிகளில் வழக்கமாக கூடும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.