சீர்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் தனி சந்நிதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களில் இது செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் கடந்த 1998-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்பின்றி வியாழக்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இதற்காக 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை காலை பரிவார யாகபூஜைகள் தொடங்கி, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை செய்யப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழி விநாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்நிதி விமான கலசத்தில் புனிதநீர் வார்க்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து, வைத்தீஸ்வரன்கோயில் சிவஸ்ரீ பழனிபாலசுப்பிரமணிய சிவாச்சாரியருக்கு சிவாகம கலாநிதி விருதும், கோவை கங்காதர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும், சென்னை பிரபாகரமூர்த்திக்கு தருமையாதீனப் புலவர் விருதும், அண்ணாமலை சிவக்குமாருக்கு மிருதங்க கலாநிதி விருதும், பொற்பதக்கங்களும், பண முடிப்புகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் வழங்கினார்.