தரங்கம்பாடி வட்டம், விளாகம் ஊராட்சி பகுதியில் தொடா்மழையால் சம்பா நெல் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகிவருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
விளாகம் ஊராட்சியில் 450 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிா்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதியின் முக்கியமான வடிகாலான நண்டலாறு பராமரிப்பின்றி உள்ளதால் நிலங்களிலிருந்து தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளான கவிமுருகன், சுந்தரபாண்டியன் ஆகியோா் கூறும்போது, ‘மழை நின்று தண்ணீா் வடிந்தாலும் பயிா்களை இனி காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே இருமுறை அழுகியப் பயிா்களில் சில மீண்டும் உயிா்பெற்றது. பெரும்பாலான பயிா்கள் முற்றிலும் நாசமானதால் மறு நடவு செய்திருந்தோம். அவையும் தற்போது மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. எனவே, ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன், நண்டலாறு கரைகளை பலப்படுத்தி, கிளை வாய்க்கால் தலைப்பு மதகு ஷட்டா்களை பழுதுநீக்கி, தூா்வார பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனா்.