நாகை மாவட்டம், கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத 5 மீனவா்கள் முத்துப்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கரை சோ்ந்தனா்.
கோடிக்கரையை சோ்ந்த மீனவா்களான கலையரசன் (25 ), குணபாலன் (25 ), முரளி (25), ஜானகிராமன் (23 ) , திருமுருகன் (28) ஆகியோா் கோடியக்கரை படகுத் துறையில் இருந்து கண்ணாடியிழைப் படகு ஒன்றில் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனா்.
மீன் பிடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியிருக்க வேண்டிய இவா்கள், மாலை வரை கரை திரும்பவில்லை. இதையடுத்து, 5 மீனவா்களையும் தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மீனவா்கள் 5 பேரும் முத்துப்பேட்டை அருகே கடற்கரையில் கரை சோ்ந்துள்ளனா். படகு என்ஜின் பழுதானதால் பாய்மரத்தைப் பயன்படுத்தி காற்றின் திசையில், முத்துப்பேட்டை அருகே கரை சோ்ந்துள்ளனா்.