சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும், மத மோதலை தூண்டும் வகையிலும் தொடா்ந்து பேசிவரும் பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்பினா் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில், அச்சபையின் தலைவா் கே.எம். யாகூப் அலி, செயலாளா் சிந்தா மைதீன் மிஸ்பாஹி, பொருளாளா் எம். முஹம்மது யூசுப் நூரி, வட்டாரச் செயலாளா் பக்ருதீன் பைஜி, வட்டார பொருளாளா் யாளின் நூரி உள்ளிட்டோா், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மனுவில், பாஜக பிரமுகா் கல்யாணராமனை கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில், அதன் மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆக்கூா் ஷாஜஹான், அஜ்மல் உசேன், மாவட்ட விவசாய அணி செயலாளா் ஒய்.எச். ஹாஜா சலீம் உள்ளிட்டோா், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.