முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 131 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 131 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்.

வேதாரண்யம் தோப்புத்துறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சாா்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பில் இருசக்கர வாகனம், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது:

மாற்றுத்திறனுடையோா்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவா்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, மடக்குக் குச்சி, மூன்று சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கை உறுப்புகள் போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 3182 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி உதவியாக தலா ரூ. 1000 வீதம் ரூ. 31 லட்சத்து 82 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், உதவி மேலாளா் (அலிம்கோ நிறுவனம்) சாம்சன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் டி.வி.சுப்பையன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கமலா அன்பழகன், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் என். நமச்சிவாயம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

முழு கட்டுரையைப் படிக்க →